மகளின் கல்வி விவரங்கள் அடங்கிய லேப்டாப்பை எடுத்துச் சென்று விட்டனர்

சென்னை: சிபிஐ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு... தனது மகளின் கல்வி விவரங்கள் அடங்கிய லேப்டாப்பை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரம், சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நேற்றும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் இந்த சோதனை தொடர்பாக வழக்குத் தொடர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் சரத்பாபு வெளியிட்ட அறிவிப்பில், “ நம்பர் 16, பைகிராஃப்ட்ஸ் கார்டன் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை பகுதியில் அமைந்துள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் மே 17ஆம் தேதி நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அப்போது வீட்டிலிருந்த ஒரு கப்போர்ட்டு மட்டும் லாக் செய்யப்பட்டிருந்தது. அதன் சாவி வெளிநாட்டில் இருந்த உரிமையாளரிடம் இருந்ததால் சோதனை செய்யவில்லை. இந்நிலையில் ஜூலை 9ஆம் தேதி அந்த கப்போர்டையும் அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அதில் வெறும் துணிகள் மட்டுதான் இருந்தது. வேறு எதுவும் இல்லை.

எனினும் சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தின் மகளின் லேப்டாப்பை எடுத்துச் சென்றனர். அவரது மகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதால் லேப் டாப்பில் கல்வி சம்பந்தமான விவரங்கள் எல்லாம் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அதோடு ஐ-பேடு ஒன்றையும் எடுத்துச் சென்றனர். இந்த சட்டவிரோதமான பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும், தனது மகள் போர்டு தேர்வை எதிர்கொள்ளும்போதுதான் இதுபோன்ற சோதனைகள் நடக்கிறது. எனது மகளின் லேப் டாப்பை தற்போது எடுத்துச் சென்றுள்ளனர். அதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விவரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.