இந்திய அரசியலமைப்பிற்கு சவால்விடும் அவர்களை அந்தமான் சிறையில் அடைக்கவேண்டும் - சஞ்சய் ராவத்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான பரூக் அப்துல்லா கடந்த 11-ம் தேதி ’இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்தபோது, சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன் என்று கூறினார். அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜம்முகாஷ்மீர் கொடியை ஏற்றினால் தான் இந்திய தேசியகொடியை ஏற்றுவோம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இவரின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரின் கருத்துக்களுக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், பரூக் அப்துல்லாவோ அல்லது மெகபூபா முப்தியோ யாராக இருந்தாலும் சரி... இந்திய அரசியலைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடங்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், இந்திய அரசியலைப்பிற்கு சவால் விடும் வகையில் பேசுபவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றுக்கொண்டிருக்கிறார்கள்? என்று கூறினார். பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரின் கருத்துக்களுக்கு தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.