எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்- முதலமைச்சர்

அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அ.தி.மு.க. தான். மேடையில் அமர்ந்து இருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான். நாளை நீங்களும் முதல்வராகலாம்.

நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு. புயல் காலத்தில் புயலைவிட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுத்தோம். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க சென்னை மேயராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தது என்ன என்று முதலமைச்சர் பேசினார்.