மேற்கு வங்கத்திற்கு புயல் நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய்; பிரதமர் மோடி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். அவருடன் மாநில முதல்வர் மம்தா சென்றார். மே.வங்க புயலுக்கு நிவாரணமாக ரூ. ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 17ம் தேதி தீவிர புயலாக மாறியது. அதி தீவிர புயலாக மாறிய அம்பான் வடக்கு மற்றும் -வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்கதேசத்தின், ஹத்தியா தீவுகள் இடையே, நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது.

சுமார் 4 மணி நேரம் கடக்க துவங்கிய இந்புயலால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இந்த புயலால் 72 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு லட்சம் கோடி சேதம் அடைந்தததாக முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில் இன்று (22ம் தேதி) காலை பிரதமர் மோடி கோல்கட்டா சென்றார். அவரை முதல்வர் மம்தா வரவேற்றார்.

தொடர்ந்து இருவரும் ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்க புயலுக்கு ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும். உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். துயரத்தை சந்தித்துள்ள இந்நேரத்தில் மே.வங்க மக்களுக்கு துணை நிற்போம். மேற்குவங்கத்தில் மின்சாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயல் பாதித் சேதத்தை சீரமைக்க மத்திய அரசு முழு உதவி செய்யும்.

மேற்கு வங்கம், ஒடிசா புயலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களோடு மத்திய அரசு நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.