ஆகஸ்ட் மாதம் 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது:-

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு இந்த தேதிகளில் வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தர வேண்டும்.

நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும். ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.