புத்தாண்டை ஒட்டி வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

செங்கல்பட்டு: வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்... ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலுடன் ஒன்றியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வருகை தரும். இந்த ஆண்டு வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

புத்தாண்டு பிறப்பையொட்டி வழக்கமான உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புது வருடம் பிறந்ததையொட்டி பல்வேறு இடங்களில் பெரும் திரளாக கூடிய மக்கள் நள்ளிரவில் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஹேப்பி நியூ இயர்' என விண்ணதிர உற்சாக முழக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து வேடந்தாங்கல் உட்பட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் செய்தனர்.