பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன இடமாற்றம்

இடமாற்றம்... பொலிஸ் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் வலயத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை சுயாதீன தேசிய பொலிஸ் ஆணைக் குழு பிறப்பித்துள்ளதுடன், வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக, இடமாற்றுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது கடமைகளைச் செய்யும் பொறுப்பு, பொலிஸ் ஒழுக்காற்று மற்றும் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது:

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விவகாரத்தில் இவர் வெளியிட்ட கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டன.

இது தொடர்பில் நாடாளுமன்றில் உள்ளக பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் அதிருப்தி வெளியிட்டதுடன் பொலிஸ் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதன் பின்னணியிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த நுவன் வெதிசிங்க காலி பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ஈ.எம்.யூ.வி. குணரத்ன சூழல் பாதுகப்பு பிரிவின் பிரதானியாகவும், பொலிஸ் சுற்றுலா பிரிவின் பிரதானியாக இருந்த கே.வி.டி.ஏ.ஜே.கரவிட்ட பொலிஸ் அபிவிருத்தி பிரிவின் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டிருந்த லால் செனவிரத்ன தற்போது பொலிஸ் சுற்றுலா பிரிவுக்கும் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ஏ.பி.ஜே. சந்திரகுமார பொலிஸ் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கும், பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த மனித வள முகாமைத்துவ பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெற்றிடமாகியுள்ள வன்னி பிராந்தியத்துக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர குமார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.