இன்சூரன்ஸ் கார்டு உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை... பரிதவிப்பு

மதுரை: நோயாளிகள் குற்றச்சாட்டு... தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் இன்சூரன்ஸ் கார்டு உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை விட முதல்வரின் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதிலேயே டாக்டர்கள் குறியாக உள்ளனர். நோயாளி அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது கூட இன்சூரன்ஸ் கார்டு இருக்கிறதா என கேட்கின்றனர். இல்லையென்றால் உடனடியாக எடுத்து வர உத்தரவிடுகின்றனர்.

அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தான் இன்சூரன்ஸ் கார்டுக்கு கைரேகை, கண்ரேகை பதிவு செய்யப்பட்டு பதிவெண் வழங்கப்படுகிறது.தினமும் நுாற்றுக்கு மேற்பட்டோர் பதிவுக்காக வருகின்றனர். இவர்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கை, கால்களில் மாவுகட்டுடனோ, குளுகோஸ் ஏற்றிய நிலையிலோ பசி, தாகத்துடன் பரிதாபத்துடன் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் அவசர சிகிச்சைக்கான வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் இன்சூரன்ஸ் கார்டு கேட்டு அலைய வைப்பதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.முடிந்தால் மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே இன்சூரன்ஸ் கார்டு வாங்குவதற்கு ஏற்பாடு செய்தால் நோயாளிகளை அலைக்கழிப்பதை தவிர்க்கலாம்.