அமமுக பொருளாளராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் நியமனம்

அமமுக பொருளாளராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரனை நியமனம் செய்து அறிவித்துள்ளார் தினகரன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணியாற்றி, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் திருச்சி மனோகரன். இதனால் தான் அரசு கொரோடா பதவியை மனோகரனுக்கு ஜெயலலிதா கொடுத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா அணியில் தீவிரமாக பணியாற்றி வந்த திருச்சி மனோகரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். அவரது நம்பிக்கைக்கு உரியவர்.

அமுமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த வெற்றிவேல், அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமமுக பொருளாளராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருச்சி முழுவதும் பரவியதை அடுத்து அவரது ஆதரவாளர்களான பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.