பிஹாரில் இரண்டு துணை முதல்வர்கள் பதவி ஏற்க வாய்ப்பு?

இரண்டு துணை முதல்வர்கள்?... பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில் பாஜக சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் வென்றன. கடந்த 2005ம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்பட்டு 41 இடங்களில் மட்டுமே இந்த முறை வென்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணி 110 இடங்களில் வென்றது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹெச்ஏஎம் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனையின் முடிவில் பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து 4-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் இன்று பதவி ஏற்க உள்ளார்.

இந்தநிலையில் பிஹார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக ரேணு தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநில துணை முதல்வராக இருந்து வரும் சுஷில் குமார் மோடியே பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த முறை அவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படாத நிலையில் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவரும் பிஹார் மாநில துணை முதல்வர்களாக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராகக் கூடும் என கருதப்படுகிறது.