மட்டக்களப்பில் கார் விபத்தில் இருவர் காயம்

கார் விபத்து... மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.

தேற்றாத்தீவு உப தபால் அலுவலகத்துக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுள் மோதுண்டுள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தின்போது கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.