மேற்படிப்புக்காக செல்லும் மகனுடன் துபாய்க்கு பறந்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மகனுடன் துபாய் பயணம்... மகன் இன்பநிதியின் மேற்படிப்புக்காக குடும்பத்துடன் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று துபாய் சென்றார்.

கருணாநிதி கிரிக்கெட்டின் மீது ஆர்வமுடையவர். அவர் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளைத்தான் ஆர்வத்துடன் பார்ப்பார். குறிப்பாக, சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் இன்பநிதி கால்பந்து விளையாட்டில் கால்பதித்து வருவது பலராலும் ஈர்க்கப்பட்டது. சினிமா, அரசியல் என்று ஆயிரம் பிஸி இருந்தாலும், அடிக்கடி தன்னுடைய மகனின் போட்டோக்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருவார் உதயநிதி ஸ்டாலின்.

ஒவ்வொரு முறையும் உதயநிதி, தன்னுடைய மகனின் போட்டோவை பதிவிடும்போது, ரசிகர்களும் திமுகவினரும் திரண்டு வந்து பாராட்டு தெரிவிப்பார்கள். மகனை விட அப்பா இளமையாக இருக்கிறாரே என்று கமெண்ட்டுகளை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில், இன்பநிதி தன்னுடைய கையின் பலத்தை காட்ட, அதனை உதயநிதி பூரித்து பார்க்கும் போட்டோ இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி தற்போது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்கிறார். இதற்காக தனது மகனுடன் உதயநிதி ஸ்டாலின் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் சென்றார். மேற்படிப்புக்காக சென்ற பேரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் வழியனுப்பி வைத்தனர்.