மகாராஷ்டிராவில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை; உத்தவ் தாக்கரே

மாநிலத்தில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல பலியானவர்கள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை தொட உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டாக்டர்கள் குழுவினருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் ஊரடங்கை முழுமையாக தளர்த்த அவசரம் காட்ட விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும், கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதைவிட ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பது முக்கியம். ஊரடங்கை அவசரமாக தளர்த்தியவர்கள் எல்லோரும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து உள்ளனர். மாநிலத்தில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை. மாநில அரசின் ‘மிஷன் பிகன் அகெயன்' திட்டம் மூலம் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. வைரசின் அச்சுறுத்தல் உள்ள வரை ‘சேஸ் தி வைரஸ்' பிரசாரம் முடியாது.

மாநிலத்தில் தற்போது மழைக்காலம். மழைக்கால நோய்களுக்கும் நாம் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.