பல்கலைக்கழக மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்பு... இலங்கை எம்.பி., வேதனை

கொழும்பு: உளவியல் ரீதியாக பாதிப்பு... நாட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கல்வி அமைச்சரிடம் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தொரிவிக்கையில், “நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். பேராதனை பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் நடைமுறை வாழ்வில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வருடத்தின் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதுடன், தற்கொலைக்கு முயற்சித்த இருவருக்கு பல்கலைக்கழக உளவியல் பிரிவு ஊடாக உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை தான் உணவு உண்கிறார்கள். மாணவர்களின் செலவுகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்துள்ளார்கள். விரிவுரைகளின் போது மாணவர்கள் மயங்கி விழுகிறார்கள். இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கி துரிதகரமாக ஒரு தீர்மானத்தை எடுக்க கல்வி அமைச்சு தலையிட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.