போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது சீருடைப்பணியாளர் இரண்டாம்நிலை காவலர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு காவல்துறையில் மற்றும் தீயணைப்பாளர் 3359 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு OC-26, BC BCM, MBC (DNC)- 28 SC, SC(A), ST-31 இருக்க வேண்டும். இத்தேர்விற்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை 14ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே போட்டித்தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். இத்தகவலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்