வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி இன்று நடக்கிறது...பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை விமர்சையாக நடைபெறும். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவின் காரணமாகவும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.