மேகாலயாவில் முதலமைச்சரின் அலுவலகம் மீது வன்முறை கும்பல் தாக்குதல்

மேகாலயா: வன்முறை கும்பல் தாக்குதல்... மேகாலயாவில் துரா என்ற இடத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தை வன்முறைக் கும்பல் தாக்கியதில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள் மாநிலத்தின் குளிர்கால தலைநகராக துராவை அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்தும் இட ஒதுக்கீடு கொள்கையை முறையாக அமல்படுத்துவது குறித்தும் உள்ளூர் தலைவர்களுடன் முதல்வர் கான்ராட் சங்மா ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் முதல்வர் அலுவகத்தின் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.