உணவை நாங்களே கொண்டு வந்துள்ளோம்; விவசாயிகளின் அதிரடி

பேச்சு வார்த்தையின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு உணவு கொடுத்த போது நாங்களே கொண்டு வந்துள்ளோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் அறவழியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனமும் இந்த போராட்டத்தின் பக்கமாக திரும்பியுள்ள சூழலில் மத்திய அரசும், போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பஞ்சாப்பின் மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உணவு கொடுத்துள்ளது. இருப்பினும் அதை வேண்டாமென சொல்லி மறுத்ததோடு “நாங்கள் உணவு கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

இந்த பேச்சு வார்த்தையில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. “எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதிக்கும் வரை போராட்டம் தொடரும். அதன் மூலம் அரசு ஏதேனும் செய்ய முன் வரும். அது எங்கள் மீது பாய்கின்ற துப்பாக்கி தோட்டாக்களா அல்லது போராட்டத்திற்கான தீர்வா என்பதை பார்க்க வேண்டும்” என கூட்டத்தில் பங்கேற்ற விவசாய பிரதிநிதி தெரிவித்திருந்தார்.