விவசாயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசர சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம் - காங்கிரஸ்

மத்திய பா.ஜ.க. அரசு, விவசாயம் தொடர்பாக, விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் அவசர சட்டம், விவசாயிகள் விலை உறுதி விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் ஆகிய 3 அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள், அறிவிக்கப்பட்ட பண்ணை மண்டலங்களுக்கு வெளியே விவசாய விளைபொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு உதவுகிறது.

இந்த சட்டம் விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே அதன் விற்பனை தொடர்பாக தனியாருடன் விவசாய ஒப்பந்தங்களை செய்து கொள்ள அதிகாரம் வழங்குகிறது. இருப்பினும், இது விவசாயிகளுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. மேலும் இது இது விவசாயிகளை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக பயனைத்தரும் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா பேட்டி அளித்தபோது, விவசாயம் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள 3 அவசர சட்டங்கள் கொடூரமானவை. அவை இந்தியாவில் விவசாயத்துக்கு எதிரான மரண முத்திரை. அவை விவசாயிகளை ஒரு சில முதலாளிகளின் பலி பீடத்தில் அடிபணிய செய்து விடும். இந்த அவசர சட்டம் தொடர்பாக எங்கள் கட்சி தலைவர்கள், ஒவ்வொரு கட்சியிடமும் பேசுவார்கள். அவர்கள் ஏற்கனவே தொடர்பில் உள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த அவசர சட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் அல்லது குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இவை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் ஒரு சில முதலாளிகளுக்காக விவசாயிகளின் பேரழிவை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான சதி ஆகும். இந்த 3 அவசர சட்டங்களும் கூட்டாட்சி அமைப்பு மீதான நேரடி தாக்குதல் ஆகும். இவற்றை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்ப்போம் என்று கூறினார்.