காற்றின் மூலம் குரங்கு அம்மை பரவுகிறதா : விரிவான ஆய்வு தேவை என அறிவிப்பு

நியூயார்க்: காற்றின் மூலம் குரங்கு அம்மை நோய் பரவுகிறது என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்று உலக சுகாதார மையம் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை குரங்கு அம்மை பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.