மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை; நெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும், லேசான மழையும் பெய்தது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று மாலை 4.00 மணி அளவில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேகமாக நிரம்பி வருகிறது. அணை நிரம்புவதற்கு இன்னும் 2.20 அடி நீர்மட்டமே தேவைப்படுகிறது.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.95 அடியாக உள்ளது. இதேபோன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 27.50 அடியாகவும் கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.76 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.25 அடியாகவும் உள்ளது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியதால் மறுகால் பாய்கிறது.