சத்தியமங்கலம் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வனவிலங்கு கணக்கெடுப்பு பணி... சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், தலமலை உள்ளிட்ட 10 வனச்சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதில் 300க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 400 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மான், யானை, சிறுத்தை, புலி, செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சம், நீர்நிலைகள், மரங்களில் உள்ள நகக்குறிகள் ஆகியவற்றை கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

6 நபர்களை கொண்ட குழுக்களாக 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் மூன்று நாட்கள் நேர்கோட்டுப்பாதையிலும், மூன்று நாட்கள் பகுதிவாரி பாதையிலும் நடைபெற உள்ளது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு நவீன ஜி.பி.எஸ் கருவி, திசைகாட்டும் கருவி ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைக்கொண்டு மூன்று நாட்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் அடுத்த மூன்று நாட்கள் மற்ற விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பும் நடைபெறும். ஆறு நாட்களுக்கு பிறகு கணக்கெடுப்பு முடிவடைந்த பிறகு கணக்கெடுப்பின் அறிக்கை தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.