மனைவி, மாமியார் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவை சேர்ந்த நாகராஜன்(வயது 48) வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கவிதா (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கடும் வாக்குவாதம் நிலவியது. இதையடுத்து கவிதா கோபித்துக் கொண்டு நாகர்கோவில் கோட்டாரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகன்களுடன் சென்று விட்டார். இதனால், நாகராஜன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நாகராஜனின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று முன்தினம் மாலை ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, நாகராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முன்பு நாகராஜன் எழுதி வைத்திருந்த எட்டு பக்க கடிதம் அங்குள்ள அறையில் சிக்கியது. அதில், என் சாவுக்கு காரணம் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு அவர்களுடைய பேச்சை கேட்டு கொண்டு என் மனைவியும் செயல்பட்டதால் எங்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் உயிரை மாய்த்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகராஜனின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.