விருதுநகர் மாவட்டம் சுப்பையாபுரத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் முத்துக்குமார்(வயது33). இவர் தனது நண்பர்களுடன் கடந்த 24-ம் தேதி காரில் குற்றாலத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்து தினமும் ஒரு அருவியில் குளித்து வந்துள்ளனர்.
நேற்று காலை பழைய குற்றாலம் அருவியில் குளித்து விட்டு செங்கோட்டையில் உள்ள மோட்டை அணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது முத்துக்குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.உடனே அவரது நண்பர்கள் முத்துக்குமாரை தேடி பார்த்துள்ளனர்.
ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் செங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் முத்துக்குமார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு வெகுநேரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால் இன்று காலை 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடுதலை தொடர்ந்தனர். அப்போது முத்துக்குமாரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.