நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக பொய் தகவல் கூறிய வாலிபர் கைது

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்.

நடிகர் சூர்யாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார் பேட்டை, சீதாம்மாள் காலனியில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அலுவலகம் செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அந்த அலுவலகம் அடையாறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பகலில் மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடித்து சிதறப்போவதாகவும் தகவல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதனையடுத்து, பூட்டிக்கிடந்த அந்த அலுவலகத்தை திறந்து போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தபட்டது.

அதில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் (வயது 28) என்பவர்தான் மிரட்டல் விடுத்த நபர் என்று தெரியவந்தது. அவரை மரக்காணம் போலீஸ் உதவியுடன் பிடித்தனர். அவர் ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்றவர் ஆவார். அவரிடம் விசாரணை நடக்கிறது.