சித்திரைத்திருவிழாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஆடிய இளைஞர்கள்

மதுரை: ஆயுதங்களுடன் ஆடிய இளைஞர்கள்... சித்திரை திருவிழாவில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் சிலர் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை பயன்படுத்தி செயின், செல்போன் உள்ளிட்ட வழிப்பறி செயல்களில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், சுமார் இருபது நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் திருவிழாவின் போது கோரிப்பாளையம், ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மது போதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.