13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்; 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
By: Monisha Thu, 06 Aug 2020 1:51:22 PM
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிரபுநகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது22). இவர், 13 வயது சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் அவர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அதன்படி சிறுமியும் அங்கு வந்தார்.
அப்போது சந்தோஷ், அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டிற்கு சென்றார். அங்கு சந்தோசின் நண்பர் சதீஷ் என்பவரும் இருந்தார். அங்கு அவர்கள் 3 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று சந்தோசும், சதீசும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பின்னர் வலுக்கட்டாயமாக இருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி அலறி கூச்சல் போட்டார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் கேட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவங்களை போலீசாரிடம் கூறினார்.
பின்னர் சிறுமி கொடுத்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.