போதையில் தரக்குறைவாக பேசியதால் நண்பரை கொலைசெய்த 6 நண்பர்கள்
By: Monisha Mon, 25 May 2020 5:08:59 PM
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனஞ்செழியன் மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (வயது23). காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த படாளம் கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின் இருவரும் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பாரதிதாசன் அவரது மனைவியை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான கீழ்வெங்கடாபுரம் கிராமத்திற்கு வந்தார். அன்று இரவு நண்பர்களுடன் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் பாரதிதாசனின் நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (21), சேதுபதி (20), ஆனந்தகுமார் (23), தமிழ்ச்செல்வன் (22), தீனதயாளன் (22), சதீஷ் (31) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், மது அருந்திய போது பாரதிதாசன் போதையில் தங்களை தரக்குறைவாக பேசியதால் கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தோம். கத்தியை அங்குள்ள விவசாய கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.