இங்கிலாந்து நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு
By: Karunakaran Wed, 15 July 2020 12:56:07 PM
சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது. தற்போது ஹூவாய் நிறுவனம் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடி சீனாவுக்கு வழங்கி வருவதாக ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
ஹூவாய் நிறுவனத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதித்தது. தற்போது, ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
2027-ம் ஆண்டுக்குள் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் இங்கிலாந்தில் இருந்து முழுமையாக அகற்றப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்கு பிறகு ஹூவாய் நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடந்த இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஹூவாய் நிறுவனத்திற்கு தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவுக்கு பின் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.