பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வெற்றி உறுதி என்கிறார் அஸ்பர் உதுமாலெப்பை
By: Nagaraj Tue, 16 June 2020 8:23:42 PM
வெற்றி உறுதி... எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என அம்பாறை மாவட்ட சம்மாந்துறை தொகுதி பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும் சமாதான நீதவானுமான அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
“கடந்த காலங்களில் முஸ்லீம் தலைமைகளின் கதைகளை கேட்டு செயற்பட்ட எமது மக்கள், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவர்களின் இனவாத போக்கை உணர்ந்து ஆட்சியில் பங்காளார்களாக செயற்பட தயாராகி விட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி வேட்பாளரை இனவாதி, இவர் ஆட்சிக்கு
வந்தால் நாடு சுடுகாடாக மாறி மியன்மார் போல மாறிவிடும் என மேடைகளில்
இனவாதம் பேசி அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வைத்தார்கள். கொரோனா அனர்த்த
காலத்தில் வல்லரசு நாடுகள் தடுமாறியபோது எமது ஜனாதிபதி அனர்த்தத்தில்
இருந்து மீட்டு, நாட்டு மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கி வைத்ததோடு
விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
எனவே
இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை தலைவர்களின் பம்மாத்து வார்த்தைகளை நம்ப
மக்கள் தயார் இல்லை. இதனால் தான் எமது ஊரிற்கான வளமான சுபிட்சம் நிறைந்த
எதிர்காலத்தை அரசுடன் இணைந்து முன்னெடுக்க ஒன்றிணைவோம்” என குறிப்பிட்டார்.