சென்னை கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆய்வு
By: Nagaraj Wed, 26 Aug 2020 5:51:20 PM
அதிகாரிகள் ஆய்வு... சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் வலியுறுத்தி வருவதை அடுத்து, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சந்தையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் சந்தை மூடப்பட்டு, அதற்கு பதிலாக மாதவரம், திருமழிசை, வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன. சந்தைகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே பெரும்பாலும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், புறநகர்
பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகவே உள்ளது எனவும் மேலும் பல்வேறு
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அரசுக்கு
தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே இரு தினங்களுக்கு
முன்பு, கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று
தமிழக முதல்வர் பழனிசாமியை வணிகர் சங்க மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ
செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி கோவிந்தராஜன்
உள்ளிட்டோர் இன்று கோயம்பேடு சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது.