மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா
By: Monisha Wed, 23 Dec 2020 11:03:51 AM
சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. இதனால் ஒரு அறையில் ஒரு மாணவர் என்ற வீதத்திலும், சமூக இடைவெளி, மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கொரோனோ உறுதியானதால் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு முதலாமாண்டு மாணவருக்கும், ஒரு 4-ம் ஆண்டு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.