வேலூர் மாவட்டத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Fri, 03 July 2020 12:05:27 PM
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,521 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,617 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 380 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.