சீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் ஸ்டிரைக்; மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Thu, 02 July 2020 4:14:07 PM
இது டிஜிட்டல் ஸ்டிரைக்... 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பது 'டிஜிட்டல் ஸ்டிரைக்' என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, 'சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என மக்கள் மத்தியில் குரல் வலுத்தது.
இந்நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட, 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது. இந்த செயலிகள், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ராணுவம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: இந்த
நடவடிக்கையானது சீனா மீது தொடுக்கப்பட்ட 'டிஜிட்டல் ஸ்டிரைக்' ஆகும்.
நாட்டு மக்களின் தகவல்களைக் காப்பாற்றவே நாங்கள் சீன செயலிகளுக்குத் தடை
விதித்தோம். இது ஒரு டிஜிட்டல் தாக்குதல்.
இந்தியா, அமைதியை
விரும்பும் நாடாக இருந்தாலும் யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால்
அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் பாலகோட்
பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம் மீது இந்திய விமானப்
படை குண்டு போட்டது. இந்த நடவடிக்கையை சில ஊடகங்கள், 'டிஜிட்டல் ஏர்
ஸ்டிரைக்' என்று வர்ணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.