கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
By: Monisha Fri, 04 Dec 2020 2:34:46 PM
புரெவி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும், கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் புயலின் தாக்கம் குமரியில் அதிகமாக இருக்கும் என கருதி அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலே தெரியாத நிலையில், மழை மேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. இடையிடையே சாரல் மழையும் தூறிக் கொண்டே இருந்தது.
அதே சமயத்தில் கன்னியாகுமரி கடலிலும் மாற்றம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி கடலில் ஒருபுறம் அலையே இல்லாமல் அமைதியாக காட்சி அளித்தது. மற்றொருபுறம் ஆக்ரோஷமாக அலை காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் நிலைமை தலைகீழாக மாறியது. அதாவது, பல அடி தூரத்துக்கு கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மணல் பரப்புகளும், பாறைகளும் வெளியே தெரிந்தன. புயல் பரபரப்புக்கு இடையே கடல் உள்வாங்கிய சம்பவம் அங்குள்ள மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.