திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 117 பேர் கொரோனாவுக்கு பலி
By: Monisha Fri, 10 July 2020 2:17:32 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் 6,085 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை மாவட்டத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5,877 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 208 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,085 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.