பீகாரில் வெள்ளம் காரணமாக 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
By: Karunakaran Wed, 29 July 2020 09:11:43 AM
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் மழை வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவிக்கையில், பீகாரில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 12 ஆயிரத்து 800 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று மட்டும் கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளதாகவும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட இடி,மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.