மழையில் நனைந்து சேதமடையும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் கவலை
By: Nagaraj Sun, 18 Oct 2020 8:23:14 PM
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் குறுவை அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து சேதமாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 38 ஆயிரம் ஏக்கர் கூடுதலாகவே சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியிருந்தார்.
ஆனால் தஞ்சை மாவட்டத்தில் அருள்மொழிப்பேட்டை உட்பட பெரும்பாலான நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை கடந்த 15 நாட்களாக வைத்துக் கொண்டு காத்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மழையில் நெல் மூட்டைகள் நனைவதும், பிறகு சாலைகளில் கொட்டி அவற்றை காய
வைப்பதுமாக அவர்கள் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை நெல்லை காய வைத்து
மீண்டும் மூட்டை பிடிக்க ஆட்களும் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள்
கூறுகின்றனர்.
நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல்
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 500 மூட்டைகளுக்கும்
குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடன்
வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் நெல் சாகுபடி செய்து, காற்று, மழை,
வெயிலில் அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து, ஆயிரங்களில் செலவிட்டு
அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு வரும் விவசாயியின்
உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல.
எனவே அரசு அறிவித்ததுபோல்
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கொள்முதல் நிலையங்களையும் திறந்து
தாமதங்களின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின்
எதிர்பார்ப்பாக உள்ளது.