தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் செல்வாக்கு 4.6 சதவீத புள்ளிகள் குறைவு
By: Karunakaran Fri, 17 July 2020 10:26:01 AM
தென்கொரியாவின் அதிபராக மூன் ஜே இன் பதவி வகிக்கிறார். இவரின் தாராளவாத கட்சியை சேர்ந்த சியோல் நகர மேயர் பார்க் வான் சூன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின், கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் அதிபர் மூன் ஜே இன் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 1,510 பேர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவில் மூன் ஜே இன்செல்வாக்கு 4.6 சதவீத புள்ளிகள் குறைந்து 44.1 சதவீதமாகி உள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன் ஜே இன் செல்வாக்கு இந்த அளவுக்கு சரிந்திருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோல் மேயர் மர்மச்சாவு, ரியல் எஸ்டேட் சந்தையில் மூன் ஜே இன் கொண்டுவந்துள்ள கொள்கை மாற்றங்கள் போன்றவை அவரின் செல்வாக்கு சரிவதற்கு காரணமாக அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.