நாளை முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறக்க முதல்வர் அனுமதி
By: Nagaraj Wed, 21 Oct 2020 3:48:35 PM
இனி 10 மணிவரை கடைகள் திறந்திருக்கலாம்... தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 10 மணி வரை நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தின் பல முக்கிய இடங்களில், மக்கள் கூட்டம் களை கட்டுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்த முதல்வர், கடைகள் 9 மணி வரையில் திறந்திருக்க அனுமதி அளித்திருந்தார். தற்போது பண்டிகைக் கால விற்பனை நடப்பதால், நேரக்கட்டுப்பாடு சிரமத்தை அளிப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்க
முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு
கடைகளின் திறப்பு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணியாக
நீட்டிக்கப்படுவதாகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை முறையாக பின்பற்ற
வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காய்கறிக்கடைகள்,
மளிகைக்கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் இரவு
10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளார்.