ஜனவரி 1-ந் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம்
By: Monisha Mon, 09 Nov 2020 09:16:15 AM
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஜனவரி 1-ந் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.