நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பாரம்பரிய உடையுடன் முதல் உரையாற்றிய இலங்கை பெண்
By: Nagaraj Thu, 03 Dec 2020 4:18:10 PM
பாரம்பரிய உடையுடன் உரையாற்றிய இலங்கை பெண்... நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கைப் பெண் வனுஷி வால்டர்ஸ் நேற்று தனது முதல் உரையினை நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது தமிழ் பாரம்பரிய உடையான புடவையுடன் சபைக்கு வந்திருந்ததுடன் தனது உரையில் சிங்களம் மற்றும் தமிழில் சுருக்கமான அறிக்கைகளை வெளியிட்டார்.
கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்திதான் வனுஷி வால்டர்ஸ் என்பவரே நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கைப் பெண் என்பதுடன், முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக்
பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்டார் வானுஷி. பெசன்ட் 12,272 வாக்குகளையும்
வானுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளையும் பெற்றார். இலங்கையில் யாழ்ப்பாணம்
மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர் வனுஷி.
இவரது தந்தை வழி பாட்டி
லூசியா சரவணமுத்து, 1931-ல் இலங்கை அரசு பேரவையின் வடக்கு தொகுதி
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தாத்தா சரவணமுத்து, கொழும்பு முதல்
மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரில்தான் கொழும்பில் உள்ள
விளையாட்டு அரங்கம் சரவணமுத்து விளையாட்டு மைதானமாக அழைக்கப்படுகிறது.
வனுஷியின் தந்தை ஜனா ராஜநாயகம், தாயார் பவித்ரா. வால்ட்டர்ஸ் என்பவரை வனுஷி திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.