பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்கவேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு கோரிக்கை
By: Monisha Thu, 19 Nov 2020 4:23:05 PM
பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்கவேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் சிலரது அதீத ஆசையால் திரைப்படங்களைப் பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள்.
அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. காஞ்சீபுரம் போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்கவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.