என்னை யாருக்கு தத்து கொடுக்கவில்லை; மாணவர் ஜீவித்குமார் பதிலடி
By: Nagaraj Tue, 20 Oct 2020 9:20:56 PM
யாருக்கும் தத்து கொடுக்கவில்லை... நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக என் பெற்றோர் என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை என்று ஜீவித் குமார் ஆசிரியை சபரிமாலாவுக்கு பதிலளித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளியில் இரண்டு வருடத்துக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற ஜீவித்குமார், கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் 193 மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில், தனியார் நீட் பயிற்சி பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 1823 வது ரேங்க் பட்டியலில் இடம்பிடித்தார்.
மேலும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக சாதனை புரிந்துள்ளார்.
இந்த நிலையில், சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில், ஜீவித்குமாரை
தத்தெடுத்து செலவு செய்து படிக்க வைத்ததாகக் கூறியிருந்தது சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து ஜீவித்குமார் கூறியதாவது:
"என்
அப்பா ஆடு மேய்ப்பவர். அம்மா 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி வேலைக்கு
செல்பவர். ஆனாலும், என் பெற்றோர் நீட் தேர்வில் நான் வெற்றி பெறுவதற்கு
மிகுந்த ஊக்கம் கொடுத்தனர். என் வெற்றிக்கு சில்வார்பட்டி அரசு மாதிரி
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவினார்கள்.
சபரிமாலா
என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு
என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாக வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப்
பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் என் பெற்றோர் என்னை யாருக்கும்
தத்து கொடுக்கவில்லை. படிப்பு சம்பந்தமாக பலரும் எனக்கு உதவி செய்துள்ளார்.
அதனால், நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். சபரிமாலா என்பவர் அவரது
முகநூலில் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தவறானவை'' என்று தெரிவித்துள்ளார்.