நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
By: Monisha Sat, 03 Oct 2020 12:14:24 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 97.13 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து 97.58 அடியானது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 14 ஆயிரத்து 119 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 13 ஆயிரத்து 598 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 97.13 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 97.58 அடியானது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.