திருப்பதி தேவஸ்தான போலி இணையதளம் குறித்து போலீசில் புகார்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளம் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட் மற்றும் தங்குமிடங்களை முன்பதிவு செய்கின்றனர். இதுதவிர கோவிலுக்கு ‘இ’ பில் மூலம் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களும் இதே இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தேவஸ்தானத்தைப் பற்றி பக்தர்கள் தெரிந்துகொள்ள இணையதளம் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில் சிலர் தேவஸ்தான இணையதளம் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக பக்தர்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேவஸ்தான ஐடி துறையினர் அளித்த புகாரின் பேரில் 40 போலி இணையதளங்கள் மீது திருப்பதி மலையில் உள்ள காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த இணையதளங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு போலி இணையதளம் தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் தேவஸ்தான நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இணையதளத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில தடய அறிவியல் துறையும் போலி இணையதளங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.