காஞ்சிபுரம் கோயிலில் பங்குனி உத்திர விழாவில் தீர்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம்: பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சர்வ தீர்த்த குளக்கரையில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்க் குழலி அம்மன் முன்னிலையில் சர்வதீர்த குளத்தில் சிவபெருமானின் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிவாச்சாரியார்கள் மந்திரங்களை ஓலிக்க சர்வ தீர்த்த குளத்தில் நோக்கி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டு பகுதியில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்ற ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததன் எதிரொலியாக, தீர்த்தவாரி நடைபெற்ற சர்வதீர்த்த குளத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, பக்தர்கள் குளத்தில் இறங்குவதை தடுக்க தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தடுப்பரண்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே, குளத்திற்கு அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த வாரி உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் குளக்கரையில் இருந்து தெளிக்கப்பட்டது. காஞ்சி ஏகாம்பரநாதர்-ஏலவார் குழலி தீர்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.