ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 8-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்தது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அதேபோல் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 84 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.