தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது

சாத்தான்குளம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜை தீவிரமாக தேடி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் விவகாரம் சிபிசிஐடி போலீசாருக்கு சென்ற நிமிடங்களில் இருந்தே பரபரப்பு, விசாரணையில் விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து நேற்று இரவு எஸ்.ஐ. ரகுகணேசை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் காவலர் முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் இந்த வழக்கின் போக்கு விறுவிறுப்பாக நடக்க ஆரம்பித்துள்ளது. மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.