உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதன் தாக்கம் குறைந்த பாடில்லை.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனாவிலிருந்து பலர் குணமடைந்து வருகின்றனர். தற்போதுவரை, உலகம் முழுவதும் 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புடைய 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.